வெளிநாடுகளில் இருந்து வரும் எல்லா பயணிகளையும் தனிமைப்படுத்த வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு

உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதை கட்டாயமாக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உருமாற்றம் பெற்ற கொரோனா இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ளது.

மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் நாளை (வியாழக்கிழமை) வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில், அதாவது, கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமும் கொரோனா பரவியது. எனவே, உருமாற்றம் பெற்று வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இங்கிலாந்து மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்து வருகிறது. கடந்த 7 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து வந்த 1,088 பயணிகளை கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிற நாடுகளை போல இன்னொரு ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தால், மிக மோசமான நிலை ஏற்படும். அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை மக்களால் எதிர்கொள்ள முடியாது.

வெளிநாடுகளில் இருந்து, விமானம், கப்பல் மூலம் வரும் அனைத்து பயணிகளை கண்டிப்பாக 14 நாட்கள் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்த வேண்டும். அல்லது, வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்த 5-வது நாள் கொரோனா பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாவிட்டால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com