பின்னலாடை தயாரிப்பு மீண்டும் சூடுபிடிக்கிறது

தொழிலாளர்கள் 60 சதவீதம் பேர் பணிக்கு திரும்பியதால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதை காணலாம்
பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதை காணலாம்
Published on

திருப்பூர்:

திருப்பூரில் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் கடந்த 18-ந் தேதியில் இருந்தே திருப்பூருக்கு திரும்ப தொடங்கினார்கள். இதன் காரணமாக பின்னலாடை நிறுவனங்களில் ஆடை தயாரிப்பும் தொடர்ந்து நடைபெற தொடங்கியுள்ளது. தற்போது திருப்பூருக்கு 60 சதவீதம் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர்.

வழக்கமாக சொந்த ஊர்களுக்கு செல்கிற தொழிலாளர்கள் உடனே திருப்பூருக்கு வந்துவிடுவதில்லை. இதனால் பல நிறுவனங்கள் அவர்களது இருப்பிடங்களுக்கே வாகனங்களை அனுப்பி அழைத்து வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

தொழிலாளர்கள் விரைவாக திரும்புவதற்கு காரணம் என்னவென்றால், கொரோனா பாதிப்பின் காரணமாக நீண்ட நாட்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது தான் ஆர்டர்கள் வந்து நிறுவனங்கள் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளன. இந்த சூழலில் தீபாவளி பண்டிகைக்கு சென்ற தொழிலாளர்கள் விரைவாக வரும்படி அறிவுறுத்தி அனுப்பின. திருப்பூர் ரைசிங் சங்கமும் விடுமுறையை குறைத்துக்கொண்டு தொழிலாளர்கள் உடனே திரும்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.

இதன் காரணமாக தொழிலாளர்கள் விடுமுறையை குறைத்துக்கொண்டு பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் தான் வேறு எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு பண்டிகை முடிந்த ஒரு வாரத்திலேயே 60 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இதுபோல் தற்போது குளிர்கால சீசன் முடியும் ஆடை தயாரிப்பும் பெரும்பாலான நிறுவனங்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆர்டர்களின்படி பல்வேறு பகுதிகளுக்கு குளிர்கால ஆடைகளும் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அடுத்தகட்டமாக கோடை கால ஆடை தயாரிப்பில் தொழில்துறையினர் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதற்காக தங்களது வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர்களும் பெற்று வருகிறார்கள்.

தொழிலாளர்களின் வருகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், கூடுதலாக ஆர்டர்கள் எடுக்கவும் முன்வந்துள்ளனர். இந்த ஆண்டு அதிகளவும் ஆர்டர்களும் பெற்று வருகிறார்கள். இதற்கான மூலப்பொருட்கள் கொள்முதலும் மும்முரமாக நடந்து வருகிறது. தொழிலாளர்கள் 60 சதவீதம் பேர் பணிக்கு திரும்பியதால், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com