தைவானுக்கு ரூ.2,060 கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா - சீனா கடும் கண்டனம்

தைவானுக்கு ரூ.2,060 கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்:

தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா தைவானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் 280 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 ஆயிரத்து 60 கோடி) மதிப்புடைய ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “தைவானுக்கு நவீன ராணுவ தகவல் தொடர்பு சாதனங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தைவானின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அரசியல் ஸ்திரத்தன்மை ராணுவ சமநிலையை உறுதி செய்வதற்கும் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் முன்னேற்றத்தை பராமரிப்பதற்கும் உதவும். தைவானின் ராணுவ தகவல் தொடர்பு திறனை நவீனமயமாக்குவதிலும், அவர்களின் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியிலும் இந்த விற்பனை முக்கிய பங்கு வகிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுத விற்பனையை ரத்து செய்யாவிட்டால் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் சீனா எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com