தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு 181 என்ற ஹெல்ப்லைன் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டது. பரிசோதனை முறையில் இந்த மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ‘181’ இலவச தொலைபேசி எண் வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். அதற்கான கால்சென்டரையும் தொடங்கி வைத்தார். மேலும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

