

சென்னை:
சென்னை பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-
நல்ல குடிமக்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். இன்று இந்த நிகழ்ச்சியில் பணி ஆணை பெறும் ஆசிரியர்கள், ஒளிவுமறைவின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள்.
எனது தலைமையிலான அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்வி சுற்றுலாவுக்கு 100 மாணவர்கள அழைத்து செல்லப்படுகிறார்கள். எதிர்வரும் காலங்களில் இந்திய அளவில் தரம் வாய்ந்த வகையில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படும்.
மாணவர்களிடையே திறன்களை வளர்க்கும் வகையில், மாணவர் கலைத் திருவிழா நடப்பாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பான பள்ளிகளுக்கு புதுமை பள்ளிகள் விருது வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.