தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை நிலவர வரைபடம்
வானிலை நிலவர வரைபடம்
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இப்போது அந்த மழையும் குறைந்து விட்டது.

சென்னை உள்பட வடமாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த வாரம் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்தது. நிலத்தடி நீர் மட்டமும் ஓரளவு உயர்ந்தது. ஆனால் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் அளவுக்கு மழை பெய்ய வில்லை.

மீண்டும் மழை எப்போது பெய்யும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெப்பச்சலனம் உருவாவதன் காரணமாக மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் உருவாகி வருவதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவ மழை மூலம் கிடைக்கும் சராசரி மழையின் அளவு இந்த ஆண்டும் குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com