

சென்னை:
மாதவரத்தில் 1180 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்துடன், கூட்டரங்கம், கணினி அறை, வட்டாட்சியர் அறை, பதிவேடு அறை, கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்கள் தங்கிட ஏதுவாக உலக வங்கி நிதியுதவியுடன் கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறை வாயிலாக இராமநாதபுரம் மாவட்டம், டி. மாரியூர் மற்றும் கன்னிகாபுரி ஆகிய இடங்களில் 5 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 பல்நோக்கு பாதுகாப்பு மையக் கட்டடங்கள் மற்றும் திருவொற்றியூரில் 13 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், கலசப்பாக்கம் மற்றும் போளூர் வட்டங்களை சீரமைத்து கோவிலூர் மதுரா ஜமுனா மரத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஜமுனாமரத்தூர் புதிய வருவாய் வட்டம் மற்றும் திருவண்ணாமலை மற்றும் செய்யார் கோட்டங்களை சீரமைத்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆரணி புதிய வருவாய் கோட்டம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 2016-2017-ம் நிதியாண்டில் ஈட்டிய நிகர லாபத்தில் தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 3 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரத்து 125 ரூபாய்க்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
சுற்றுலாத் துறை அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 42 மடிக்கணினிகள் மற்றும் ஸ்கேனர்கள் மற்றும் ரூ.14 லட்சத்து 80 ஆயிரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 24 கணினிகள் மற்றும் பிரிண்டர்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9 சுற்றுலா அலுவலர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் பழனிக்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். #tamilnews