

சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் மிகவும் கோரமாக்கப்பட்டு இருந்தது.
சிறுமியின் உடலில் 87 இடங்களில் காயம் இருந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநில குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது பெயர் ஹர்சயாய் குர்ஜார் (வயது 25). ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் பகுதியை சேர்ந்தவர். மேலும் அவரது சகோதரர் ஹர்சின், நரேஷ், அமர்சின் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சூரத்தில் உள்ள மார்பிள் தொழிற்சாலையின் காண்ட்ராக்டரான ஹர்சயாய், கற்பழிக்கப்பட்ட சிறுமியையும், அவரது விதவை தாயையும் ரூ.35 ஆயிரம் கொடுத்து ஒருவரிடம் இருந்து வாங்கி இருந்தது தெரிய வந்தது.
இந்த இருவரையும் ஹர்சயாய் ரூ.35 ஆயிரத்துக்கு வாங்கி சூரத்துக்கு அடிமை தொழிலாளிகளாக கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து கற்பழித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விதவைத் தாயை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.