

புதுடெல்லி:
கார்த்தி சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறைக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஊழியர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.
எனவே இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் அருண்மிஸ்ரா, அமிதவராய் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். விசாரணை துவங்கியதும் அமலாக்கத்துறை இந்த மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்