மருத்துவ பணியாளர்களுக்கு தற்காப்பு உடைகள் வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் மருத்துவ பணியாளர்களுக்கு தற்காப்பு உடைகள் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் எவ்வித அறிகுறிகளும் இன்றி தொற்றுவதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு தற்காப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஜெரில் பனைட் என்பவர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். பின்னர் அவர்கள் இதுதொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.

அதனை தொடர்ந்து, “இந்த மனுவில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகள் பயனுள்ளதாக இருப்பதை பார்க்கிறோம். எனவே மத்திய அரசு தற்காப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சீர்படுத்தி கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கும் வகையில் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இதுபோன்ற மனு ஒன்றின் மீது கடந்த 8-ந்தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த பிற உத்தரவுகளும் தொடர வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com