தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அரசாணை வெளியீடு - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அரசாணை வெளியிட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அரசாணை வெளியீடு - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
Published on

சென்னை:

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை பற்றி சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கடந்த 2½ வருடமாக பல்வேறு காரணங்களை சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறது. இப்போது வாக்காளர் பட்டியலை சரிப்படுத்த அரசாணை போடுவது எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு விசயமாகும்.

ஏனென்றால் வாக்காளர் பட்டியல் தயார் நிலையில்தான் உள்ளது. தேர்தலை தள்ளிப்போட சுப்ரீம்கோர்ட்டில் காரணம் சொல்வதற்காக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளனர்.

2½ வருடமாக தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டு தற்போது மீண்டும் முதலில் இருந்து வாக்காளர்பட்டியல் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கப்படும் என்று சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தார். இந்த அறிவிப்பு வருகிற உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால், எந்தெந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்ற விபரம் முழுமையாக வெளியிடப்படவில்லை.

வெளிப்படைத்தன்மை இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு அனைத்து பணிகளும் தயாராகத்தான் உள்ளன. ஆனாலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு தோல்விபயம்தான் காரணம்.

தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதுதான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com