பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது- அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் நம்பிக்கை இழக்க கூடாது- அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
Published on

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மாணவப் பருவத்தின் முதற்கட்டத்தை முடித்து, பிளஸ்-2 பொதுத்தேர்வினை எழுதி வெற்றி பெற்று, கல்வியில் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் முன்னேற, ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ-மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்பது ஜெயலலிதாவின் அமுத மொழியாகும்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள், தங்கள் விருப்பம் போல் உயர்கல்வி பெற்றிட மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றி வாய்ப்பை சிலர் இழந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து வரும் தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வியினை தொடர்ந்திடவும், வாழ்வில் உயர்ந்திடவும், எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ-மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரவர் ஆற்றலின் அடிப்படையில், விருப்பமுள்ள உயர்கல்வி வாய்ப்பினைப் பெறவும், கல்லூரி வாழ்க்கையினை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்திடவும் வாழ்த்துகிறேன்.

இந்தத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை. தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர்ந்து, அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்கும்படி வாழ்த்துகிறேன்.

இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணாக்கர்கள் எந்தவித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெரும் கவலையும், வருத்தமும் அளிக்கிறது.

அரசு பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்களைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com