

சென்னை:
விதிமுறையை மீறி ஆர்.கே.நகரில் ஸ்கூட்டி வழங்குவதற்கு விண்ணப்பம் வழங்கப்படுவதாக அ.தி.மு.க. மீது மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து காசிமேட்டில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால், இடைத் தேர்தலுக்கு இடைத் தேர்தல் ஆர்.கே.நகரில்தான் நடைபெறுகிறது.
இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. எம்.பி. வெங்கடேஷ் பாபு, வீடு வீடாக சென்று பெண்களுக்கு ஒரு விண்ப்ப படிவத்தை கொடுத்து வருகிறார். அதாவது, ஸ்கூட்டி வேண்டுவோர் இந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்தால் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த திட்டம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிவித்த திட்டம். இதற்காக நிதியே ஒதுக்கப்படவில்லை. ஆனால், இப்போது
வாக்காளர்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக, ஸ்கூட்டி வழங்குவதாக கூறுகின்றனர். இந்த முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்களே இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும்.
புயல் குறித்த வானிலை மைய எச்சரிக்கையை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. மாயமான மீனவர்கள் குறித்த எந்த விவரமும் முதல்வருக்கு தெரியவில்லை.
ஆர்.கே.நகர் வாக்காளர்கள், நமது வேட்பாளர் மருதுகணேஷ்-க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.