வரதராஜன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வசதிகள் இல்லை என தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இவர் தவறான தகவல் வெளியிட்டுள்ளார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை சார்பில் வரதராஜன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், செய்தி வாசிப்பாளர் வரதராஜன் கொரோனா நிலவரம் குறித்து வீடியோவாக பதிவிட்டிருந்ததைப் பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். வழக்குகளைத் திரும்ப பெறுக என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com