என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சிஎஸ்கே அணியில் இருந்து கழற்றி விடப்படும் ஜடேஜா? கோரிக்கை வைத்த ரெய்னா
- சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது.
- சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த முறை அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருகிறது.
அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரவீந்திர ஜடேஜாவை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திறமையான வீரர். அவர் பல ஆண்டுகளாக அணிக்காக உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே 'சர் ரவீந்திர ஜடேஜா' அணியில் இடம் பெற வேண்டும்.
என கூறினார்.
ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






