ஸ்லோவேக்கியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் பீட்டர் பெல்லெகிரினி

ஸ்லோவேக்கியா பிரதமராக இருந்த ராபர்ட் பிகோ ராஜினாமா செய்ததையடுத்து, பீட்டர் பெல்லெகிரினி புதிய பிரதமராக பதவி ஏற்றார். #SlovakiaPM #PeterPellegrini
ஸ்லோவேக்கியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் பீட்டர் பெல்லெகிரினி
Published on

பிராத்திஸ்லாவா: 

ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு, நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கு திசையில் செக் குடியரசும், ஆஸ்திரியாவும், வடக்கு திசையில் போலந்தும், கிழக்கு திசையில் உக்ரைனும், தெற்கு திசையில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.

ஸ்லோவேக்கியா நாட்டில் பிரதமரின் ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் ஒருவர் சமீபத்தில் தனது காதலியுடன் படுகொலை செய்யப்பட்டார். பிரதமரின் ஊழல் குறித்து செய்தி வெளியிட்டதாலேயே அந்த செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கோபமடைந்த மக்கள், பிரதமர் ராப்ர்ட் பிகோவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பகலாக நீடித்த போராட்டத்தால் பிரதமர் ராபர்ட் பிகோ, தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். 

பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிபர் ஆண்ட்ரேஜ் கிஸ்காவின் அறிவுறுத்தலின்படி கடந்த 16-ம் தேதி, பிரதமர் ராபர்ட் பிகோ தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் ராஜினாமா செய்ததையடுத்து புதிய அரசை அமைக்குமாறு துணைப் பிரதமர் பீட்டர் பெல்லெகிரினிக்கு அதிபர் ஆண்ட்ரேஜ் அழைப்பு விடுத்தார். 

இதையடுத்து ஸ்லோவேக்கியாவின் புதிய பிரதமராக பீட்டர் பெல்லெகிரினி இன்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு அதிபர் ஆண்ட்ரேஜ் கிஸ்கா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  #SlovakiaPM #PeterPellegrini #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com