அழகு நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது

நீலாங்கரை அழகு நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரில் 3 பேரை படத்தில் காணலாம்
கைது செய்யப்பட்ட 6 பேரில் 3 பேரை படத்தில் காணலாம்
Published on

சென்னை:

திருவல்லிகேணியை சேர்ந்தவர் சரவணன். இவர் நீலாங்கரையை அடுத்த வெட்டுவங்கேணி காமராஜ் நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று அழகு நிலையத்துக்குள் 2 வாலிபர்கள் வந்து வரவேற்பு பகுதியில் இருந்த பெண்ணிடம் கட்டண விவரங்களை கேட்டுவிட்டு சென்றனர். பின்னர் அந்த 2 வாலிபர்களுடன் 4 பேர் திடீரென அழகு நிலையத்துக்குள் புகுந்தனர்.

அவர்கள் திடீரென வரவேற்பு பகுதியில் இருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டினர். அப்பெண் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினையும், ரூ.7 ஆயிரத்தையும் பறித்து கொண்டு 2 வாலிபர்கள் மட்டும் தப்பி சென்றனர். மற்ற 4 பேரும் அழகு நிலையத்தில் மேலும் பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஜீவா என்பவர் சத்தம் கேட்டு அங்கு வந்தார். அழகு நிலையத்துக்குள் மர்ம கும்பல் பெண்ணை மிரட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அழகு நிலையத்தின் கதவை பூட்டிவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து சென்று அழகு நிலைய கதவை திறந்து உள்ளே சென்று கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரத்தை சேர்ந்த தர்மா, திருவான் மியூரை சேர்ந்த குமரன் சின்ன நீலாங்கரை குப்பம் பகுதியை சேர்ந்த பிரபாகரன், சூரியா என்பது தெரியவந்தது. குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் வேளச்சேரி பகுதி அமைப்பாளராக உள்ளார்.

பணம், நகையை பறித்து கொண்டு தப்பி ஓடியது பள்ளிகரணையை சேர்ந்த சதீஷ், வெட்டுவங்கேணியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். அவர்களையும் போலீசார் கைது செய்து நகை-பணத்தை மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com