புதுவையில் திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு: வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

புதுவையில் குப்பை வரி, வீட்டு வரி, வர்த்தக வரி போன்றவை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை திட்டமிட்டபடி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதுவையில் திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு: வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
Published on

புதுச்சேரி:

புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன், துணைத்தலைவர் அன்பழகன், பொதுச்செயலாளர் பாலு, பொருளாளர் தங்கமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் குப்பை வரி, வீட்டு வரி, வர்த்தக வரி போன்றவை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தோம்.

ஆனால் போராட்டம் அறிவித்த எங்களை அரசு அழைத்து பேசவில்லை. சம்பந்தம் இல்லாத சங்கங்களை அழைத்து பேசி இருக்கிறார்கள். அதில் எடுத்த முடிவிலும் வரிகளை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை. தள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் புதுவை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வரி உயர்வு இன்னும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என அனைத்து பகுதிகளிலும் கடையடைப்பு நடைபெறுகிறது. இதில் 20 ஆயிரம் கடைகள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

புதுவையில் நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் சாலை, அண்ணாசாலை, மி‌ஷன் வீதி என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்படும். சிறு கிராமத்தில் கூட கடைகள் அடைக்கப்படும். அனைத்து மார்க்கெட்டுகளும் மூடப்படும். மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com