மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம் - கவர்னருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வரும் சிவசேனா, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை அக்கட்சியின் தலைவர்கள் இன்று திடீரென சந்தித்துப் பேசினர்.
கவர்னருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு
கவர்னருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிவசேனா கூட்டணி (105-56) ஆட்சி அமைப்பதில் 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.

முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்துவிட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது.

இதற்கிடையே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் போனில் பேசி ஆலோசனை நடத்தினர்.

சிவசேனாவின் திட்டம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் இன்று மாலை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சிவசேனா தலைவர்கள் ராம்தாஸ் காதம் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறினாலும், மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com