ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றிய எடியூரப்பா - அதிகாரிகள் வட்டாரத்தில் கலக்கம்

கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பா தலைமை செயலாளர், தலைமை வக்கீல், 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றியது அதிகாரிகள் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றிய எடியூரப்பா - அதிகாரிகள் வட்டாரத்தில் கலக்கம்
Published on

பெங்களூர்:

கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பா, முதல்வர் அலுவலகத்துக்கு சென்று அமர்ந்ததும் கோப்புகளை பார்க்கத் தொடங்கினார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பல்வேறு துறை உயர் அதிகாரிகளை மாற்றி எடியூரப்பா அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

கர்நாடகா மாநில அரசின் தலைமை வக்கீலாக மதுசூதன் நாயக் இருந்தார். அவருக்கு பதில் நவதகி புதிய அரசு வக்கீலாக நியமிக்கப்படுவதாக எடியூரப்பா உத்தரவிட்டார்.

அதன் பிறகு அரசின் கூடுதல் தலைமை செயலாளரையும் எடியூரப்பா மாற்றினார். அதன்படி புதிய கூடுதல் தலைமை செயலாளராக லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவை தவிர சில முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் எடியூரப்பா மாற்றினார். போலீஸ் உயர் அதிகாரிகளில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்ற அறிவிப்புகள் கர்நாடகா மாநில அரசுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் எடியூரப்பாவின் உத்தரவுகளுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com