

முதல் நாளில் இருந்தே பேட்டிங் செய்ய ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. இதில் விராட் கோலி, புஜாரா அரைசதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 187 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அம்லாவின் அரைசதத்தால் 194 ரன்கள் சேர்த்தது.
7 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 247 ரன்கள் சேர்த்தது, ரகானே 48 ரன்னும், விராட் கோலி 41 ரன்களும் எடுத்தனர். பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலான ஆடுகளத்தில் இந்தியா 2-வது இன்னிங்சில் 247 ரன்கள் எடுத்தது தென்ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சி அளித்தது.
இந்தியா 2-வது இன்னிங்சில் விளையாடும்போது விராட் கோலி, ரகானே, முரளி விஜய், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டனர். ஆனால், ஆடுகளத்தை குறை கூறாமல் தைரியமாக விளையாடினார்கள்.
பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. இந்தியாவின் பவுன்சர் பந்தை தாக்குப்பிடிக்க முடியாமல் டீன் எல்கர் தடுமாறினார். பும்ரா வீசிய பந்து எல்கரின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. அத்துடன் ஆடுகளம் சரியில்லை என நடுவரால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் இரண்டு போட்டியில் களம் இறக்கப்படாத ரகானே 48 ரன்கள் சேர்த்தது இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. முதல் இன்னிங்சில் அம்பயர்ஸ் கால் மூலம் 9 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். 2-வது இன்னிங்சில் அசத்தினார்.
2-வது இன்னிங்சில் 48 ரன்கள் குவித்தது குறுத்து ரகானே கூறுகையில் ‘‘ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடி விட்டால், நான்தான் ஹீரோ என்று நினைத்துக் கொண்டு களம் இறங்கினேன். என்னால் 48 ரன்கள் அடிக்க முடிந்தது’’ என்றார்.