

ஜெட்டா:
எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக அரசுகளின் வருமானத்தின் பெரும் பகுதி எண்ணெய் ஏற்றுமதி மூலமாக வருகிறது. வருமான வரி மற்றும் பொருட்களின் மீதான வரிகள் மேற்கண்ட நாடுகளில் இல்லாத நிலை இத்தனை காலமும் இருந்து வந்தது.
இந்நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக உணவுப்பொருட்கள், துணிமணிகள், எலக்ட்ரானிக்ஸ், தொலைபேசி கட்டணம், தண்ணீர், மின்சார பில், ஓட்டல் புக்கிங் ஆகியவற்றுக்கு 5 சதவிகிதம் அளவுக்கு வாட் (மதிப்பு கூட்டு வரி) வரி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்த வரிவிதிப்பில் இருந்தது நிதி சேவைகள், பொது போக்குவரத்து மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாட் வரி மூலம் இந்த ஆண்டில் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் வருமானம் கிடைக்கும் என ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.
சவுதியில் புகையிலை பொருட்கள், குளிர்பாணங்கள் ஆகியவை இந்த வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, சுற்றுலா வரிகளும் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், வருமான வரி வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் உள்ள பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் வாட் வரியை கொண்டு வர திட்டமிட்டன. ஆனால், பல்வேறு தாமதங்கள் காரணமாக 2019 ஆண்டில் அமல்படுத்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.