

ராமநாதபுரம்:
பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புதூரைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் நேற்று சத்திரக்குடிக்கு காய்கறி வாங்க சைக்கிளில் புறப்பட்டார்.
முத்துவயல் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சத்திரக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து சண்முகத்தின் மகன் கருமலையான் சத்திரக்குடி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் அருண் பிரகாஷை கைது செய்தார்.