

தூத்துக்குடி:
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக சிபிசிஐடி போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜ் தூத்துக்குடியில் உள்ள அரசன்குளத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக முத்துராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பின் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்ட முத்துராஜை வரும் 17-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.