

சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால், தனது ஓட்டலில் பணிபுரிந்தவரின் மகளான ஜீவஜோதியை 3-வதாக திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவரது கணவர் பிரின்ஸ்சாந்தகுமாரை கடத்தி கொலை செய்ததாக கடந்த 2011-ம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் ராஜகோபால் உள்பட 12 பேருக்கு பூந்தமல்லி கோர்ட்டு கடந்த 2004-ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த ராஜகோபாலுக்கும், மற்ற குற்றவாளிகளுக்கும் ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபாலும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடந்து வந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம்தான் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் உடனடியாக ராஜகோபாலும் 11 குற்றவாளிகளும் கோர்ட்டில் சரண் அடைந்து சிறை செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
‘‘ஒருநாள் கூட ராஜ கோபாலால் சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக அவரை சரண் அடைய உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி ராஜகோபால் படுத்த படுக்கையாக ஸ்டெர்ச்சரில் வந்து ஐகோர்ட்டில் சரண் அடைந்தார். அப்போது அவரது உடல் நிலை சீராக இல்லாததால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதிகள் வார்டில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார். அவரது இதய துடிப்பு குறைந்து வந்ததுடன், சுவாசிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் ராஜகோபாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று அதிகாலையில் இருந்தே ராஜகோபாலின் உடல் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. அவர் கவலைக்கிடமாக உள்ளார்.