புதுவையில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமையும்- சாமிநாதன் எம்.எல்.ஏ. உறுதி

2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதுவையில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்று கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
சாமிநாதன் எம்.எல்.ஏ.
சாமிநாதன் எம்.எல்.ஏ.
Published on

புதுச்சேரி:

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் தொகுதியை சேர்ந்த இளங்கோ என்கிற குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதற்கான விழா நேற்று மாலை எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.

விழாவில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் இளங்கோ என்கிற குமார் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார். இதில் மாநில பொதுச் செயலாளர்கள் செல்வம், மோகன்குமார், துணைத்தலைவர்கள் செல்வம், அருள்முருகன், தொகுதி தலைவர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுவையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டனர்.

வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் பிரதமர் மோடி கை காட்டும் நபர் தான் எம்.எல்.ஏ.க்களாக வர முடியும். இங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. இதனை யாராலும் தடுக்க முடியாது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் தான் மாநிலம் வளர்ச்சி அடையும். அப்போது காரைக்கால் பகுதி மேம்படுத்தப்படும். காரைக்கால்-புதுவை ரெயில்பாதை அமைக்கப்படும். நீட், ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக பெட்ரோலிய துறை உதவியுடன் பயிற்சி மையம் அமைக்கப்படும். ஜிப்மர், என்.ஐ.டி.யில் மாணவர் சேர்க்கை இரட்டிப்பாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com