சபரிமலையில் இன்று நடை திறப்பு - பலத்த போலீஸ் பாதுகாப்பு, 144 தடை உத்தரவு

சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுவதையொட்டி, அங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர், மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Sabarimala
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சபரிமலை:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இரண்டாவது முறையாக இன்று கோவில் நடை திறக்கப்படுகிறது.

சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்கள்கிழமை (இன்று) ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது, பெண்களை அனுமதிக்காமல் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர், இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை. 

கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தி நிறுத்தி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக 3,731 பேரை கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 545 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

கோப்பு படம்

எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கோவிலில் அமைதியான முறையில் தரிசனத்தை உறுதிசெய்யவும், பக்தர்களை பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaTemple 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com