அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடி - பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை

திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற அரசு பேருந்தில், கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ElectionComission #MoneySeized
அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.3.47 கோடி - பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை
Published on

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்து தகவல் கொடுத்துள்ளது.

இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நடந்த தீவிரமான வாகன சோதனையில் ரூ.250 கோடிக்கு பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்படும் பணம் பற்றிய தகவல்களை சிலர் தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசியமாக சொல்லி விடுகிறார்கள். அதன்பேரில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்கிறார்கள்.

காட்பாடி, பெரம்பலூரில் அப்படித்தான் சோதனை நடத்தி ரூ.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

அதே பாணியில் திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் ரூ.3½ கோடி பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இது பற்றிய விபரம் வருமாறு:-

திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி நேற்று பிற்பகல் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க கோடிக்கணக்கில் பணம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த நரிப்பள்ளி அருகே உள்ள பையர் நாயக்கன் பட்டியில் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது பஸ்சில் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்தது. அந்த பைகளை எடுத்து திறந்து பார்த்தபோது அவற்றில் பேப்பர்களில் சுற்றப்பட்டு 200 ரூபாய், 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது.

பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் அரூரை அடுத்த பையர்நாயக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்த பன்னீர் (45) மற்றும் கண்டக்டர் அரூரை அடுத்த வேடகட்டமடுவு அருகே உள்ள கட்டரசம் பட்டியை சேர்ந்த ராமு (37) ஆகியோரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

அந்த பண கட்டுகள் அருகே அமர்ந்து பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடி கிராமத்தை சேர்ந்தவரும், திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக டெப்போவில் கண்டக்டராக பணியாற்றுபவருமான செல்வராஜ் என்பவர் அந்த பார்சல்களை கொண்டு வந்ததாகவும், அவை டிக்கெட் பண்டல் என்று அவர் கூறியதாகவும், அதற்கு அவர் லக்கேஜ் வாங்கவில்லை என்றும் கண்டக்டர் ராமு கூறினார்.

செல்வராஜை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஆனால் தனக்கும் இந்த பணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறினார். ஆனால் அதிகாரிகள் அவரை விடவில்லை. அவரை அழைத்து சென்று கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

நள்ளிரவு வரை அவரது வீட்டில் சோதனை நடந்தது. இதில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏதேனும் சிக்கியதா என்று தெரியவில்லை.

இதற்கிடையே பஸ்சில் வந்த பணக்கட்டுகள் அடங்கிய 7 பைகளில் ஒரு பையில் ஒரு கட்சியின் கரை உள்ள மப்ளரும், திருவண்ணாமலை மாவட்டம், வேட்ட வலத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் ரமேஷ் என்பவரின் பாங்கி பாஸ் புத்தகமும் இருந்தது. அந்த பாஸ் புத்தகத்தில் இருந்த செல் நம்பர் மூலம் ரமேசை வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி அவரை அதிகாரிகள் வரவழைத்தனர்.

வேட்டவலத்தில் உள்ள அவரது வீட்டிலும் நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

தனது பையும் பாங்கி பாஸ் புத்தகமும் 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டதாக அவர் கூறினார். தனக்கும் பஸ்சில் வந்த பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

அவரிடம் இன்று அதிகாலை வரை விசாரணை நடத்தி விட்டு அவரை விடு வித்து விட்டனர். வருமான வரித்துறை விசாரணைக்கு அழைக்கும்போது நேரில் வர வேண்டும் என்று கூறி சென்று விட்டனர்.

கண்டக்டர் செல்வராஜ் மட்டும் அதிகாரிகளின் பிடியில் உள்ளார். அவரிடம் இன்றும் விசாரணை நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com