

செங்குன்றம்:
எண்ணூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி தனசேகர். இவரது கூட்டாளிகளான மாதவரத்தை சேர்ந்த கிரி (35), கொசப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (33), சூளையை சேர்ந்த கார்த்திகேயன் (38) ஆகியோர் செங்குன்றம் வடகரை மைதானத்தில் காரில் அமர்ந்து அப்பகுதியில் உள்ள லாரி அதிபர்களுக்கு போன் செய்து மிரட்டி உள்ளனர்.
‘நீங்கள் லாரிகளில் திருட்டு மணல் அடிக்கிறீர்கள். இதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு ரூ.50 லட்சம் மாமூல் தர வேண்டும்’ என மிரட்டினர்.
இதுகுறித்து புழல் உதவி கமிஷனர் ரவிக்கு புகார் சென்றது. உடனடியாக அவர், மாமூல் கேட்டு மிரட்டியவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பலராமன், தலைமை காவலர்கள் கிருஷ்ண மூர்த்தி, நல்லுசாமி ஆகியோர் வடகரை பகுதிக்கு விரைந்தனர்.
போலீசாரை கண்டதும், கிரி, கார்த்திக், கார்த்திகேயன் ஆகியோர் காரில் ஏறி தப்பி சென்றனர். எனினும் போலீசார் அவர்களை தங்களது காரில் துரத்தி பாடியநல்லூர் சிக்னல் அருகே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், 2 கத்தி, 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தனசேகர் கூறியதால் தான் லாரி அதிபர்களிடம் பணம் வாங்க சென்றதாக அவர்கள் கூறினர். இது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.