

சென்னை:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வருகிற 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
இதனை தொடர்ந்து புதிய டி.ஜி.பி.யாக திரிபாதி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உத்தரவு நேற்று மாலையிலேயே வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது போன்று எந்த உத்தரவும் வரவில்லை. இன்று புதிய டி.ஜி.பி. நியமனத்துக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல புதிய தலைமை செயலாளரும் நியமிக்கப்படுகிறார்.
தற்போது தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெறுவதை தொடர்ந்து அவருக்கு பதில் கவர்னரின் செயலாளராக உள்ள ராஜகோபால் புதிய தலைமை செயலாளராக நியமிக்கபடுகிறார்.
இதற்கான உத்தரவும் விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே ஓய்வு பெற்று 2 ஆண்டு பணி நீட்டிப்புடன் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த டி.கே.ராஜேந்திரனுக்கு புதிய பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு பாதுகாப்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க உள்ளது.