மந்திரிகள் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது- ராஜினாமா செய்த காங். எம்எல்ஏ சுதாகர் பேட்டி

விதானசவுதாவில் மந்திரிகள் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்கு உரியது என்று ராஜினாமா செய்த சிக்பள்ளாப்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுதாகர் கூறியுள்ளார்.
ராஜினாமா கடிதம் கொடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதாகரை பிற எம்.எல்.ஏ.க்கள் இழுத்து சென்ற காட்சிகள்.
ராஜினாமா கடிதம் கொடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதாகரை பிற எம்.எல்.ஏ.க்கள் இழுத்து சென்ற காட்சிகள்.
Published on

பெங்களூரு :

சிக்பள்ளாப்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுதாகர். இவர் விதானசவுதாவுக்கு வந்து சபாநாயகர் ரமேஷ் குமாரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் அவர் சபாநாயகர் அறையில் இருந்து வெளியே வந்தபோது, பிற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் அவரை பிடித்து இழுத்தனர்.

மந்திரி கே.ஜே.ஜார்ஜ் அறையில் வைத்து அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து போலீசார் சுதாகர் எம்.எல்.ஏ.வை மீட்டனர். பின்னர் சுதாகர் எம்.எல்.ஏ. கார் மூலம் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதன்பிறகு வெளியே வந்த சுதாகர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நானும், மந்திரி எம்.டி.பி. நாகராஜூவும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளோம். ராஜினாமா கடிதத்தை கவர்னரிடமும் வழங்கி உள்ளோம். எங்களின் ராஜினாமா கடிதத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். சித்தராமையா எனது மனதை மாற்ற முயற்சி செய்தார். அவரிடம் எனது பிரச்சினைகளை கூறி உள்ளேன். விதானசவுதாவில் மந்திரிகள் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்கு உரியது. நான் மும்பைக்கு செல்லவில்லை. கடந்த 13 மாதங்களாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த அதிருப்தியால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com