

சென்னை:
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.
இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தெரிவித்து வந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரில் செயல்படும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகிறது.
இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று எடப்பாடி தலைமையிலான அணி தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை. சிறப்பான சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. சிகிச்சை அளிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.