

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்த குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நர்சு அமுதவள்ளி அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோடு நர்சு பர்வீன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுவரை 14 குழந்தைகள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மேலும் பல இடைத்தரகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கிருஷ்ணன், சேலம் இன்ஸ்பெக்டர் சாரதா, நாமக்கல் இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆகியோர் இன்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசை சந்தித்தனர்.
அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் குழந்தை விற்பனை வழக்கு குறித்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் சிபி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர். #RasipuramNurse #CBCID