

பாட்னா:
பீகாரில் ராஷ்டீரிய லோக் சமதா கட்சி உபேந்திர குஸ்வகா என்பவரால் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவர் ராஷ்ட்டீரிய சமதா கட்சியில் இருந்து வெளியேறி இந்த கட்சியை தொடங்கினார். கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து 3 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பீகார் சட்டசபை தேர்தலில் இந்த கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இந்த கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வகாவுக்கும், மாநில தலைவர் அருண் குமார் எம்.பி.க்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் ராஷ்ட்டீரிய லோக் சமதா கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. பாய்பிரேந்திரா வெளியிட்டுள்ளார். அக்கட்சியின் தலைவரும் மத்திய மந்திரியுமான உபேந்திரா குஷ்வாகா விரைவில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி தங்கள் அணியில் சேருவார் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று இருந்த இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான ஜித்தன் ராம் மாஞ்சி அதில் இருந்து விலகி லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி பிரதாப்பை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இப்போது பா.ஜனதா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலக முடிவு செய்துள்ளது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உபேந்திரா குஷ்வாகா மத்திய மந்திரியாக இருக்கிறார். அவர் கூட்டணியில் இருந்து விலகும் போது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. முதல்- மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பா.ஜனதா கூட்டணியில் சேர்த்ததை குஷ்வாகா விரும்பவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்தார்.
இதற்கிடையே நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் தங்களுடன் அவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் ராஷ்ட்டீரிய ஜனதா தள எம்.எல்.ஏ. பாய் பிரேந்திரா தெரிவித்தார். #Tamilnews