

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி,
செயல்படுத்தி வருகிறார்.
அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். பயிர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருந்த சுமார் 86 லட்சம் விவசாயிகள் இந்த அறிவிப்பால் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் வங்கிக் கடன் வாங்கியிருந்த விவசாயிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 26 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டன.
முதல்கட்டமாக இந்த மாதத்துக்குள் விவசாயிகளின் கடன் தொகையை மாநில அரசு வங்கியில் செலுத்தி, அதற்கான சான்றிதழ்களை பெறும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்ட துவக்க விழா இன்று லக்னோ நகரில் நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், விவசாயிகளின் கடன் தொகையான சுமார் 50 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை யோகி ஆதித்யாநாத் வழங்கினார்.
அதன்பின்னர், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘விவசாயிகளின் வருமானம் 2022-க்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் அறிவித்த பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், ரபி பருவத்துக்கு 1.5 சதவீதமும், காரிப் பருவத்துக்கு 2 சதவீதமும் பிரீமியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.