

அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள தனது 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை “ரஜினி மக்கள் மன்றம்” என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். அதன்படி உறுப்பினர்கள் சேர்க்கை முடித்து அடையாள அட்டையை வழங்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் சமீபத்தில் நாடு திரும்பினார். சென்னை திரும்பியதும் அவர் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று சென்னையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் தனது கனவு என்றும் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசியல் பற்றி இந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசாவிட்டாலும், அவரது இந்த கருத்து ரசிகர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.