

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. அதேசமயம் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தனது பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. ஆட்சியின் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, பிரகாஷ் ஜவடேகர், மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கட்சியின் பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.