குஜ்ஜார் இன மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு- ராஜஸ்தான் சட்டசபையில் மசோதா தாக்கலானது

ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தவர்கள் மற்றும் 4 இதர சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #Rajasthangovt #5pcquota #Gujjarsquotabill
குஜ்ஜார் இன மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு- ராஜஸ்தான் சட்டசபையில் மசோதா தாக்கலானது
Published on

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
 
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2017-ம் ஆண்டில் அம்மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும்  ரெயில்  மறியல் உள்ளிட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  ரெயில்கள் செல்லும் தண்டவாளங்களின்மீது தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்கள் கடந்த 6 நாட்களாக இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும்போது எங்களுக்கு ஏன் 5 சதவீதம் வழங்க கூடாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்து மற்றும் 4 இதர சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com