

அகமதாபாத்:
குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சித்தலைவர்களும் மாநிலத்தை முற்றுகையிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சூரத் நகரில் உள்ள நகை வியாபாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் குஜராத்தின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்து விட்டது. குறிப்பாக, சூரத் நகரின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.
ஆடைகள் தயாரிப்பு துறை மற்றும் வைர நகைகள் தயாரிப்பு துறைகள் முற்றிலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. எனவே தான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்றைய தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சூரத் நகரில் உள்ள வைர நகைகள் தயாரிக்கப்படும் நகைப்பட்டறைக்கு சென்றார். அங்கு வைர நகைகள் தயாரிப்பது குறித்து பார்வையிட்டார்.
அதன்பின்னர், வைர நகைகள் தயாரிப்பு தொடர்பான கருவிகள் மற்றும் கண்ணாடிகளில் சோதனை செய்து பார்த்தார். வைரங்களை தரம் பிரிப்பது குறித்தும், தயாரிப்பதிலும் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அங்குள்ள தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார்.