என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்- ரங்கசாமி நம்பிக்கை
- மீனவர்களுக்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்.
- சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களை வரிசையாக அறிவித்து ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் இந்த அரசு செயல்படுத்தும்.
அதன்படி சமீபத்தில் அறிவித்த மீனவர்களுக்கான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். ரேசன் கார்டிற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் கோதுமையும் வழங்கப்படும்.
புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தார். அப்போது அவரிடம் மாநில அரசுக்கு நிதி, நிர்வாக விவகாரங்களில் மத்திய அரசின் உதவியை கோரினேன். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொள்கையான மாநில அந்தஸ்து விவகாரத்தை எங்கள் அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இப்பொழுதும் வலியுறுத்தினேன். தொடர்ந்து வலியுறுத்துவோம். இது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். நம்பிக்கைத் தான் வாழ்க்கை. அதே நம்பிக்கையில் தான் மாநில அந்தஸ்திற்கு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிடைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






