எம்.பி. தொகுதியில் உள்ளூர் வேட்பாளரை களம் இறக்க வேண்டும்- பா.ஜனதாவினர் திடீர் போர்க்கொடி

வெளி மாநிலத்தை சேர்ந்த யாரும் புதுவையில் போட்டியிடவில்லை.பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
எம்.பி. தொகுதியில் உள்ளூர் வேட்பாளரை களம் இறக்க வேண்டும்-  பா.ஜனதாவினர் திடீர் போர்க்கொடி
Published on

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளது.

தேர்தலில் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் குடியுரிமை பெற்று வாக்காளர் அட்டை வைத்துள்ளவர்கள் எந்த மாநிலத்திலும் போட்டியிடலாம். பிரதமர் மோடி குஜராத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதேபோல கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வேறு மாநிலத்தில் போட்டியிடுவார்கள்.

தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மோகன்குமாரமங்கலம் புதுவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2004-ம் ஆண்டு பா.ஜனதா சார்பில் புதுவையில் லலிதா குமார மங்கலம் போட்டியிட்டார். அதன்பிறகு வெளி மாநிலத்தை சேர்ந்த யாரும் புதுவையில் போட்டி யிடவில்லை.

சிறிய மாநிலமான புதுச்சேரியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதிப்பதில்லை என அனைத்து கட்சிகளும் தீர்மானமாக இருக்கின்றனர். புதுச்சேரியை சேர்ந்தவர்தான் எம்.பி.யாக வேண்டும் என உறுதியாக இருப்பர்.

இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கவர்னர் தமிழிசை போட்டியிடலாம் என தகவல் வெளியானது.

அப்போதே உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பிருப்பதாக வெளியான தகவல் புதுவை பா.ஜனதா நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித்தலைமையிடம் புதுவையை சேர்ந்தவர்களே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com