புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனே வழங்கி விட முடியாது- துணை நிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சினை..மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது.
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்
Published on

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கேக் வெட்டினார்கள். பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 

புதுச்சேரி வளர்ச்சி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு நல்ல நிர்வாகம், நல்ல ஆட்சி நடப்பதுதான் காரணம். எனவே ஒன்றும் நடக்கவில்லை என்பதெல்லாம் உண்மை அல்ல. முதலமைச்சருடன் சுகாதார மேம்பாட்டுக்காக ஆலோசனை நடத்தியுள்ளேன். கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. ஏழை மாணவர்களின் நிலை உயர இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் நசுக்கப்படும் என்பதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும் தமிழ் படிக்கலாம். கடந்த 10 வருடமாக தமிழை ஏன் கட்டாய பாடமாக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 

மாநில அந்தஸ்து விவகாரத்தில் எம்.பி.யாக இருந்தவர்கள் எல்லாம் பாராளுமன்றத்தில் இதற்காக எத்தனை முறை பேசினார்கள்? புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சினை. அதை உடனடியாக செய்ய முடியாது.

அதற்காக பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும். அங்கு அனுமதிபெறவேண்டும். இது அரசியலுக்காக சொல்லப்படுகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது. நாங்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறோம். ஆனால் நான் சார்ந்த தமிழகத்தின் முதலமைச்சர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார் என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com