

புதுச்சேரி:
புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம். இவரது நண்பர்கள் சிலர் புதுவை கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். இவர்கள் காரில் புதுவையை சுற்றி பார்த்து விட்டு ரிசார்டுக்கு திரும்பினர்.
அப்போது கிருமாம்பாக்கம் போலீசார் அவர்களின் காரை மடக்கி விசாரித்துள்ளனர். இதில் காரின் ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தபோதும் அந்த காவலர்கள் தேவையற்ற சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.
அதோடு வலுக்கட்டாயமாக அபராதம் கொடுக்க வேண்டும் எனக்கூறி தகராறு செய்து அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய ஏட்டுகள் ஞானமூர்த்தி, திவித்ரசன், நவீன் காந்த் மற்றும் போலீஸ்காரர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் அதிரடியாக ஆயுத படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி. சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.