நீண்ட இழுபறிக்கு பிறகு புதுவை எம்.எல்.ஏ.க்களின் வாரிய தலைவர் பதவி நீடிப்பு: கிரண்பேடி ஒப்புதல்

நீண்ட இழுபறிக்கு பிறகு புதுவை எம்.எல்.ஏ.க்களின் வாரிய தலைவர் பதவி நீடிப்புக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு புதுவை எம்.எல்.ஏ.க்களின் வாரிய தலைவர் பதவி நீடிப்பு: கிரண்பேடி ஒப்புதல்
Published on

புதுச்சேரி:

புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேருக்கும், 2 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டு இருந்தது. வழக்கமாக வாரிய தலைவர் பதவி காலம் 3 ஆண்டுகள் நிர்ணயிக்கப்படும்.

ஆனால், கவர்னர் கிரண்பேடி வாரிய தலைவர்களுக்கு ஓர் ஆண்டு காலம் மட்டுமே நிர்ணயித்து இருந்தார். அதோடு பல நிபந்தனைகளும் விதித்து இருந்தார். இவர்களது பதவி காலம் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. இதனையடுத்து வாரிய தலைவர் பதவிக்கு நீடிப்பு கோரி அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியது.

இந்த கோப்புக்கு கவர்னர் கிரண்பேடி அனுமதி அளிக்கவில்லை. இதற்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பை அனுப்பினார். இதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சகமும் வாரிய தலைவர் பதவி நீடிப்புக்கு அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து அப்போதைய தலைமை செயலாளர் மனோஜ் பரிதா வாரிய பதவி நீடிப்புக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு செல்லாது என கவர்னர் கிரண்பேடி நிறுத்தி வைத்தார்.

இதனால் வாரிய தலைவர்கள் மீண்டும் பதவி ஏற்க முடியாத நிலை ஏற்ட்டது. இந்த நிலையில் தற்போது புதிய தலைமை செயலாளராக அஸ்வின்குமார் பதவி ஏற்ற பிறகு வாரிய தலைவர் பதவி நீடிப்பு கோப்பு கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

இதனை பரிசீலித்து கவர்னர் வாரிய பதவி நீடிப்புக்கு அனுமதி வழங்கி உள்ளார். கடந்த ஆண்டை போலவே தற்போதும், பல நிபந்தனைகளை விதித்தே பதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வளை தலத்தில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:-

மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுப்படி 7 எம்.எல்.ஏ.க்களின் வாரிய தலைவர் பதவி, கடந்த முறை போன்றே நிபந்தனைகளுடன், ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்கனவே மீறி இருந்தனர். வாரிய தலைவர் நியமனத்தை பொறுத்தவரை எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. நான் மத்திய அரசின் உத்தரவை கடைப்பிடிக்கிறேன்.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி சமூக வளைத் தளத்தில் கூறி உள்ளார்.

4 மாத கால இடை வெளிக்கு பிறகு வாரிய தலைவர் பதவி நீடிப்புக்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com