

மத்தியபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29, மே 6 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் சுஜால்பூர் பகுதியில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் நாட்டுப்புற பாடகர் பிரஹலாத் திஸ்பியனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இப்போது நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் எண்ணங்களுக்கு இடையிலான போராட்டம் ஆகும். பாஜக, ஆர்எஸ்எஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் எங்கள் குடும்பத்தை அடியோடு வெறுக்கின்றனர். மக்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் பேசி வருகின்றனர்.
வெறுப்பினை அன்பினால் மட்டுமே கலைய முடியும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்கள் கட்சியினர் அதனை புரிந்துக் கொண்டு தான் செயல்படுகின்றனர். தேர்தல் அறிக்கையில் கூறியது போல காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு நன்மை கிட்டும்.