

புதுடெல்லி:
வடமாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் புரட்டி எடுத்தது. இந்த புழுதி புயலில் சிக்கி ராஜஸ்தானில் 27 பேரும், உ,பி.யில் 42 பேரும், ஜார்க்கண்டில் 2 பேரும் உயிரிழந்தனர்.
பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்துள்ளன. மேலும் சில இடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.
இந்நிலையில், வடமாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் புழுதி புயல் ஏற்பட்டது அறிந்து வருந்துகிறேன், புழுதி புயலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இதேபோல், பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், வடமாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்படைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார். #duststorm #RamnathKovind #PMModi