

சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அவர்களை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று பிற்பகல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக ராம் நாத் கோவிந்த் இன்று மாலை கலைவாணர் அரங்கம் வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கருணாஸ் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றார்.