

சென்னை:
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும். தொழிற்கூடங்கள் அமைக்க மானியம் வழங்க வேண்டும். அரசு நிலங்களில் களிமண் எடுக்க சிறப்பு சலுகை அளிக்க வேண்டும். மாவட்டம் தோறும் மண்பாண்டங்கள் தயாரிக்க தலா 100 மின்சக்கரம் வழங்க வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.
இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்துக்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் தலைம தாங்கினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்ட திடலில் மண் பானைகள், அகல் விளக்குகள் மற்றும் அழகு பொருட்களை செய்து வழங்கினார்கள். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏ. பீமாராவ், நிஜாமுதீன், வீரபாண்டியன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கணபதி, மகேஷ் கண்ணன், எஸ்.என்.பழனி, அண்ணாமலை, தங்கவேலு, கிரிலோகநாதன், தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.