‘பாகிஸ்தான் பயணத்தை ஒத்திப்போடுங்கள்’ - அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தல்

தன் நாட்டு குடிமக்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான பயணங்களை தவிர்த்து பிற பயணங்களை ஒத்திப்போட வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on

வாஷிங்டன்:

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. அங்கு மனித வெடிகுண்டு தாக்குதல், கார் குண்டுவெடிப்பு, கண்ணிவெடி தாக்குதல், கையெறி குண்டுவீச்சு என பல்வேறு வகையிலான தாக்குதல்களை பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குங்கள் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிற நிலையில், குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை.

இந்த நிலையில், தன் நாட்டு குடிமக்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான பயணங்களை தவிர்த்து பிற பயணங்களை ஒத்திப்போட வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அது தொடர்பான உத்தரவை வெளியுறவுத்துறை பிறப்பித்துள்ளது. கடைசியாக கடந்த மே மாதம் இப்படி ஒரு உத்தரவை அமெரிக்க வெளியுறவுத்துறை பிறப்பித்திருந்தது. அதற்கு பிறகு இப்போதுதான் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில், “பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க மக்களுக்கு தற்போது வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயங்கரவாத குழுக்கள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அமெரிக்க தூதரக அதிகாரிகள், கடந்த காலத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாகி உள்ளனர். அவை தொடரும் என தகவல்கள் கிடைத்துள்ளன. பணத்துக்காக ஆட்களை கடத்தும் செயல்களிலும் பயங்கரவாதிகளும், கிரிமினல்களும் ஈடுபட்டு வருகின்றனர். அடிப்படைவாத வன்முறை என்பது பாகிஸ்தான் முழுவதும் இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. மத சிறுபான்மையினர் தொடர்ந்து குறிவைத்து கொல்லப்படுகின்றனர். அரசு அதிகாரிகள் வாழுகிற பகுதி, அப்பாவி மக்கள் வாழுகிற பகுதி என்றெல்லாம் பயங்கரவாதிகள் பேதம் பார்த்து தாக்குதல் நடத்துவதில்லை, எனவே மிகவும் அத்தியாவசியம் இல்லாத பாகிஸ்தான் பயணங்கள் அனைத்தையும் ஒத்திப்போடுங்கள்” என கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com