மலேசியாவில் தவித்த 30 பேர் மீட்பு: மத்திய மந்திரி நடவடிக்கை

மலேசியாவில் சிக்கி தவித்த 30 பேர் மத்திய மந்திரியின் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கையால் மீட்கப்பட்டனர்.
மலேசியாவில் தவித்த 30 பேர் மீட்பு: மத்திய மந்திரி நடவடிக்கை
Published on

நாகர்கோவில்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டம் நெய்யூரை அடுத்த நெல்லியரைகோணம் பிஜோ, கல்குறிச்சி வாழவிளை தருண்ஜோஸ், தக்கலை புலியூர் குறிச்சி தானேஷ், நெல்லியரைகோணம் ஜாஸ்பர் புஷ், நெய்யூர் வடக்கு ஆழ்வார்கோவில் டய்ற்றஸ், நாகர்கோவில் சகோதரர் தெரு தினேஷ், மேக்கோடு வலியவிளை அஜீவ் ஜட்சன் உள்பட 30 பேர் இரணியலை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்சி மூலமாக மலேசியா வேலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜனவரி 30-ந் தேதி மலேசியா சென்றுள்ளனர்.

மேற்கண்ட 30 பேரும் பொறியியல் படிப்பு முடித்தவர்கள். இவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் உணவும் கொடுக்காமல், மலேசியாவில் சித்ரவதை செய்யப்படுவதை அறிந்த மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மலேசியா கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தையும், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளையும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து உடனடியாக மேற்கண்ட 30 பேரையும் இந்தியா கொண்டுவர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் விளைவாக கடந்த 7-ந் தேதி அன்று பாதிக்கப்பட்ட நபர்களை கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்து அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை செய்து கொடுத்தனர். மேற்கண்ட அனைவரும் இன்று தங்களது சொந்த ஊர் வந்து சேர்ந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com